Monday, August 15, 2011

"சாரே ஜஹான் சே அச்சா"

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என்ற பிரிவினைகள் இல்லாமல் இருந்தது. அப்போது இந்தியா என்பதை விட, இந்துஸ்தான் என அழைக்கவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் விரும்பினர். இதில் ஒருவர் தான் முகமது இக்பால். அலாமா இக்பால் என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்ட இவர், ஒரு உருது கவிஞர். இவர் உருது மொழியில் எழுதிய பிரபல பாடல் தான், சாரே ஜாஹன் சே அச்சா.

இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய இக்பாலின் இந்த கவிதை 1904ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இட்டிஹத் என்ற வாரஇதழில் வெளியானது. பின்னர் அதுவே ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுக்க பயன்படும் முக்கிய கருவியாக மாறியது. தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளும் பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட முறையில் பாடி சுதந்திர தாகத்தை மக்களுக்கு புகட்டினர்.

கடந்த 1965ம் ஆண்டு, இந்த கவிதைக்கு சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் இசை அமைத்து, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பாடினார். அதன்பின் மிகவும் பிரபலமடைந்த இப்பாடலின் மெட்டு, இந்திய முப்படைகளின் அணிவகுப்பின் போது வாசிக்கப்படும் முக்கிய இசை என்பது யாவரும் அறிந்ததே.

பாடலின் கருத்து:

இந்துஸ்தான் அல்லது இந்திய நாடு, உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளை விட சிறந்தது. அது நாம் வசிக்கும் தோட்டம், நாம் அதில் உள்ள நைட்டிங்கேல் பறவைகள். அந்நிய நாடுகளில் வசித்தாலும் நமது தாய்நாட்டின் நினைவு இதயத்தை வருட்டிக் கொண்டிருக்கும்.

உயர்ந்த, வானாளாவிய மலை தொடர்கள், அவை நமக்கு அரண்களாக மாறின. மனதை மயக்கும் ஆயிரக்கணக்கான ஆறுகள், அவை நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டன. நம் ஒவ்வொருவரிடையே ஏற்படும் பேதங்களை பொறுத்துக் கொள்ள மதங்கள் நமக்கு வழிகாட்டவில்லை.

இந்துஸ்தானில் வாழும் நாம் இந்தியர்கள், இந்துஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

உலக சாம்ராஜ்ஜியங்களான கிரேக்கம், எகிப்து, ரோம் ஆகியவை அடையாளம் தெரியாமல் மாறி மறைந்தன.

ஆனால், நமது அடையாளங்கள் மட்டும் இன்றும் மாறவேயில்லை. அப்படியே நூற்றாண்டுகள் மாறினாலும், காலங்கள் கைவிட்டாலும் நமது வளர்ச்சி மறையாது என்று போகிறது இந்தப் பாடல்.

No comments:

Post a Comment